படித்துவிட்டு பகிருங்கள், பிறருக்கு உபயோகப்படலாம்..

Uploading: 759754 of 759754 bytes uploaded.


ஆப்பிள் இன்று இந்திய சந்தையினை வியாபித்து நின்றாலும், சில ஆலயங்களின் பிரசாதம் என்ற அளவுக்கு வந்துவிட்டாலும், அப்பழம் நாம் வாழும் இச் சூழ்நிலைக்கு, நம் உடலுக்கு நல்லதா என்றால் #இல்லை...!!!
இறைவன் சில விஷயங்களை மிக அழகாக செய்திருக்கின்றான்... குளிர் பிரதேசத்தில் சக்தி கொடுக்கும் காய்கனிகள்...பாலை நிலத்தில் வெப்ப நிலத்தில் சக்தி கொடுப்பவை என அந்தந்த சூழலுக்கு ஏற்ப படைத்திருக்கின்றான்
தமிழ்நாட்டு பனை கொடுக்கும் பதனீர் அப்படியானது. அது உடலுக்கு குளிர்ச்சி. இங்கு விளையும் அரிசி முதல் பயிர்வரை உடலுக்கு ஏற்றது.
அரேபிய பேரீட்சம்பழம் அந்த சூழலுக்கு ஏற்றது. ஒட்டகங்கள் அங்கு தாக்குபிடிக்க படைக்கபட்டிருப்பது போல அங்குவாழும் மனிதருக்கானது அந்த கனி...
ஆப்பிள் உடலுக்கு சூடு கொடுக்கும் பழம். குளிர் பிரதேசத்தில் அது விளையும் குளிர்பிரதேச மக்களுக்கான பழம் அது
மா பலா வாழை என தனக்கு சரியான பழத்தை இப்பூமி இங்கு விளைவித்தது.
இங்கு வெள்ளையன் வரும்வரை எல்லாம் சரியாக இருந்தது. சூடான பூமியில் மேலும் சூடேற்றி உஷ்ண கோளாறை உருவாக்கும் பழமோ உணவோ இங்கு இல்லை.
வெள்ளையன் மிளகை தேடித்தான் வந்தான், வந்தவன் மிளகை வாங்கிவிட்டு சத்தற்றதும் நற்காரம் இல்லாததுமான மிளகாய் வற்றலை விட்டுவிட்டு சென்றான்.
அது தென் அமெரிக்காவில் இருந்து வந்தது.
தக்காளியும் உருளையும் அப்படி வந்ததே, புகையிலையும் அப்படி வந்ததே.
இங்கு காரத்துக்கு நல்லமிளகு பயன்படுத்தும் முறையே இருந்தது, உண்டபின் வெற்றிலையோடு மிளகும் பாக்கும் சுண்ணாம்பும் ஏலமும் வைத்தே தாம்பூலம் தரிக்கும் பழக்கம் இருந்தது.
வெள்ளையன் சமையலுக்கு வற்றலை கொடுத்தான், வெற்றிலைக்கு பாக்கை கொடுத்தான், மிளகை அவன் கொண்டு சென்றான்.
கருப்பட்டியும் வெல்லமும் இங்கு இனிப்புக்கான பொருளாய் இருந்தன. அதில் சீனியினை திணித்தான்....கருப்பட்டி சந்தை மெல்ல சுருங்கியது...
கள் இருந்த இடத்தை தன் நாட்டு ஒயினாலும் இன்னும் எதெல்லாமோ கொண்டு நிரப்பினான்.
தேங்காய் இருந்த இடத்தை எதுவெல்லாமோ பிடித்தது. தேங்காய் கொடுக்கும் ஆரோக்கியம் கொஞ்சமல்ல‌...
மிளகு, அரிசி, கருப்பட்டி, பயிர் என்றிருந்த தமிழர் உணவில் புகையிலை, சீனி, மிளகாய் என எதையெல்லாமோ திணித்தான்.
நோய்கள் பெருகின...
ஆப்பிளை அப்படித்தான் இங்கு பயிரிட்டான், ஆப்பிளை மட்டுமா கொண்டுவந்தான்...??? கேரட் , பீட்ரூட் இன்னும் குளிரில் விளையும் பல பயிர்களை கொண்டுவந்தான்.
அது அவனுக்கு சரி...
ஏற்கனவே உஷ்ணத்தில் வாழும் மக்களுக்கு இவை ஏன்? அவை கூடுதல் உஷ்ணத்தை ஏற்றின‌.
அத்தோடு விட்டானா?
அவன் ஏற்படுத்திய உலகபோர்கள் அரிசி தட்டுப்பாட்டை உருவாக்கின...விளைவு தமிழருக்கு சப்பாத்தியும் பரோட்டாவும் அறிமுகமாயின‌...
சப்பாத்தியினை கொடுத்தானே அன்றி அதை உண்ணும் முறை சொன்னான் இல்லை...சப்பாத்தி என்பது நெய் சேர்க்காமல் உண்ணகூடா உணவு...
ஆம் அதில் உஷ்ணம் அதிகம், அரேபியர் அதை தயிரோடு உண்பர்...வட இந்தியர் நெய்யோடு உண்பர்...தமிழன் அதை உண்ண தெரியாமல் உண்டான்...
நோய் பெருகிற்று...அதாவது சூடான பூமியில் சூடு கொடுக்கும் உணவினை உண்டு நம்மை நாமே கெடுத்தோம்...
வெள்ளையனின் குளிர்நாட்டில் அரிசி கஞ்சியும், பனங்கள்ளும் குடிக்க சொல்லுங்கள், அவன் குடிப்பானா...???
குடித்தால் என்னாகும் என அவனுக்கு தெரியும், அவன் தன் சமூகத்தை காத்துகொண்டிருக்கின்றான்...
உஷ்ணத்தால் ஏற்படும் நோய்க்கு விஞ்ஞானம் காரணம் சொல்லாது...இங்கு உஷ்ணத்தை கட்டுபடுத்த நல்லெண்ணெய் குளியலும் நெய்யும் இன்னும் பலவும் இருந்தது...
எல்லாம் பழமைத்தனம் என ஒழிக்கபட்டது.
இன்று எண்ணெய்யும் கலப்படம், இப்போதுள்ள தலைமுறை டால்டாவினை நெய் என்றும், கலப்பட எண்ணெயினை சுத்தமான எண்ணெய் எனவும் அறிகின்றன பரிதாபம்...!!!
காரணம் அவற்றுக்கு உண்மையான பொருளும் மணமும் எப்படி இருக்கும் என்றே தெரியவில்லை... அவை என்ன செய்யும்?
எண்ணெயில் கலப்படம், உணவு பொருளில் கலப்படம் , இவை எல்லாம் இன்று ருசி இல்லா உணவல்ல, ஆரோக்கியமில்லா உணவினை கொடுத்துவிட்டன‌...
நெய்யும் பாலும் வெண்ணெயும் போலி என அரசு கழகங்களே சொல்லும் நிலையென்றால் தனியார் நிலையங்கள் எப்படி இருக்கும்?
எதையோ தின்று எதையோ குடித்து, எதையோ புகைத்து, எதையோ மென்று இல்லா நோய்கள் எல்லாவற்றையும் இழுத்துவிட்டான் தமிழன்.
எதை உண்டாலும் கசப்பாய் முடிப்பது உலகளாவிய உணவு முறையாய் இருந்தது, சீனாவில் தே எனும் கசப்பு பானத்தை அருந்துவார்கள்.
ஆப்ரிக்காவிலும் அரேபியாவிலும் காப்பி இருந்தது.
தமிழனுக்கு வேப்பம்பூ துவையலும் பாகற்காயும் அன்றாடம் சமையலில் இருந்தது. பாகம் என்றால் சமையல்.அதில் இருக்க வேண்டிய காய் பாகற்காய் ஆனது
இவை முறையாக இருந்தவரை சர்க்கரை நோய் இல்லை.
பாலில் காப்பி, டீ , சீனி என வெள்ளையன் ஏற்படுத்திய வியாபார தந்திரம் இன்று நம் வாழ்வியல் அங்கமாக மாறிவிட்டது, காபியும் டீயும் பருகியே தீரவேண்டியவை அல்ல‌.
அவை இன்றியும் வாழமுடியும்...அது போக பேக்கரிகள் வந்து நிரம்பியிருக்கின்றன, பரோட்டாவும் பேக்கரியும் இன்னும் பலவும் இங்கு ஏற்ற விஷயம் அல்ல.
இவை பெருக பெருக மருத்துவ மனைகளும் பெருகுகின்றன.
இச்சமூகம் எவ்வளவு நல்ல விஷயங்களை நாகரீகம் என இழந்து இன்று சீழ்பிடித்த சமூகமாக மாறிவிட்டது என நினைக்கும் பொழுது தலையே சுற்றுகின்றது...
ஏகபட்ட விஷயங்களை இழந்துவிட்டோம், ஆனால் எதை எல்லாம் இழந்தோம் என்பதை நம் ஆலயங்களிலும் இந்த நாட்டின் பாரம்பரியமான பண்டிகை மற்றும் சடங்குகளிலும் காணலாம்..
நம் தெய்வங்களுக்கு பாரம்பரியமாக படைக்கபடும் பழம், பானம் எல்லாம் உடலுக்கு நல்லவையே...
அங்கு பயன்படும் எலுமிச்சை முதல் எள் வரை எல்லாமே நன்மை கொடுப்பவை...
தாம்பூல தட்டில் காணப்படும் வெற்றிலை முதல் எல்லாம் ஆரோக்கியமே...
தேர்களில் தெய்வங்களுக்கு வீசப்படும் மிளமும் உப்பும் உடலுக்கு எக்காலமும் நன்மையே...
உங்களுக்கு ஆரோக்கியமான உணவு வேண்டுமென்றால் நம் உணவினை பாருங்கள்...நைவேத்தியம் எனப்படும் உணவு முறையாக தயாரிக்கபடுமானால் அதை விட ஆரோக்கிய உணவு வேறு இல்லை
துளசி போல் அருமருந்தில்லை.
அசைவத்தில் கூட கிராம ஆலயங்களை கவனிக்கலாம்...ஆடும் சேவலும் எப்படி இருந்தால் அங்கு பலியிட வேண்டும்...??? எப்படி சமைக்கபட வேண்டும் என்ற விதிகள் உண்டு...
அதன்படி உண்டால் அவையும் ஆரோக்கியமே...பிராய்லர் கோழியினை அங்கு வெட்டுவதில்லை...
சனிக்கிழமை தோறும் நல்லெண்ணெய் தேய்த்தால் உஷ்ணம் வராது...
அதிகாலை சேவலோடு எழுவதும் அந்தியில் பறவைகள் ஓயும்பொழுது தூக்கத்தை தழுவதும் நோய்க்கு இடம் கொடா..
மலைமேல் ஏறி தெய்வத்தை வணங்குவதும் , குளிர் ஆறுகளில் குளிப்பதும் ஆரோக்கியமே... மாதம் இருமுறையாவது இருக்கும் விரதம் உடலை வலுப்படுத்தும்...
இன்னும் ஏராளமான விஷயங்கள் உண்டு, அவை எல்லாம் இழந்ததன் விளைவு நீரிழிவு முதல் ஏகப்பட்ட நோய் ஒருபுறம்...
கருத்தரிப்பு சிக்கல், சிசேரியன் என மறுபுறம். மிக மிக மோசமான சிக்கலுக்கு செல்கின்றது இச்சமூகம்..
பழமையினை மீட்டெடுத்தால் நல்வாழ்வு வாழ உதவும், நம் முன்னோரின் நலமான பலமான வாழ்வின் ரகசியம் அங்குதான் புதைந்திருக்கின்றது...
அதை மீட்டெடுப்பீர்களாயின் நல்வாழ்வு கிட்டும்...மாறாக அதெல்லாம் பழமை என ஒதுக்குவீராயின் டாக்டரும் மருந்துகடைகாரனுமே உங்களுக்கு தெய்வமாவான்...
இந்த தெய்வத்தையும் ஆலயத்தையும் அதன் அனுகிரகத்தையும் அந்த உணவு மற்றும் விரத முறைகளை மறந்தவனுக்கு அதுதான் கதி.
அப்படி ஒரு பலஹீனமான சமூகமாக இந்தியா உருவாக வேண்டும் என வெள்ளையன் ஆசைபட்டதன் விளைவுதான்.
முன்னோர்களின் உணவு பழக்கத்தை மறக்க செய்தால் இங்கு நோய் கூடும் என்பதும் இந்தியா தன் மருந்து மற்றும் மருத்துவத்தின் வேட்டைகாடாகும் என்பது அக்காலத்தில் இருந்தே அவன் கணக்கு.
அது மிளகை திருடி வற்றலை கொட்டுவதில் தொடங்கி இன்றைய கே.எப்.சி வரை தொடர்கின்றது.
நாம் பாரம்பரியத்தை மீட்டெடுத்தால் தவிர நம் ஆரோக்கியத்தை திருப்பமுடியாது, அந்த பாரம்பரியம் சைவ ஆலயங்களின் வழிபாட்டிலும் இன்னும் பலவற்றிலுமே இருக்கின்றது.
என்று அதை இச்சமூகம் உணருமோ அன்றே இங்கு நல் ஆரோக்கியம் திரும்பும்.
மாறாக கண்டதையும் உண்டுவிட்டு, தெரு தெருவாக, கடற்கரை கடற்கரையாக நடந்தாலும், ஆகபோவது ஒன்றுமில்லை..
நடக்க வேண்டியது முன்னோர்களின் வழித்தடத்தை நோக்கி...
அங்கேதான் இருக்கின்றது உடல் நலத்துக்கான மருந்து...

Comments

Popular posts from this blog

"ரயில் ஓட்டுனர்கள் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம்"